10th Tamil Guide Unit 6.4 - கம்பராமாயணம்

10th Tamil Guide Unit 6.4

இயல் 6.4. கம்பராமாயணம்

பால காண்டம் – ஆற்றுப் படலம்

தா துகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்

போ தவிழ் பொய்கை தோ றும் புதுமணற் றடங்க டோறும்

மா தவி வேலிப் பூக வனம்தொ றும் வயல்க டோறும்

ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே. (31)

– கம்பர்

பாடலின் பொருள்

    மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயுஆறு.அது,ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது.

பாலகாண்டம் – நாட்டுப்படலம்

(இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன்கவி காட்டுகிறது.)

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் 

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் 

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.* (35)

பாடலின் பொருள்

    குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.

பாலகாண்டம் – நாட்டுப்படலம்

(ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக்கொண்டு, ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.)

வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்

நிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்

உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்

வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால் (84)

    கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.

அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்

(இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ‘ஐயோ’ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.)

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.* (1926)

பாடலின் பொருள்

    பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.

I. பலவுள் தெரிக.

1.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

ஊரில் விளைச்சல் இல்லாததால்

அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

அங்கு வறுமை இல்லாததால்

விடை : அங்கு வறுமை இல்லாததால்

II. சிறு வினா

1.உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

  • கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.
  • வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

III. சிறு வினா

1,‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.


நிலம் தொழில் /                     உணவுப்பபயிர் இன்றைய வளர்ச்சி

குறிஞ்சி மலை நெல், திணை நெல், தேன், கிழங்கு ஏற்றுமதிப் பொருள்களாக இருக்கின்றன. நாட்டு மருத்துவத் துறையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது.

மருதம் செந்நெல், வெண்ணெல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்களின் உணவுப் பொருளாக இருப்பதால் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

நெய்தல் உப்பு, மீன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிகுதியாகி உள்ளன. இத் தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைப் போலவே உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

IV. நெடு வினா

1.சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…

இவ்வுரையைத் தொடர்க!

“தண்டலை மயில்களாட தாமரை விளக்கத் தாங்கக்,

கொண்டல்கண் முழவினேங்க குவளைக்கண் விழித்து நோக்க,

தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.”

தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,

சோலையை நாட்டிய மேடையாகவும்

மயிலை நடன மாதராகவும்

குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்

தாமரை மலரை விளக்காகவும்

மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்

வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்

பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து

தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.

இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்து பார்த்தால் கம்மன் தமிழுக்கு கிடைத்த வரம் எனலாம்.

படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகிறான்.

“காலமெனும் ஆழியிலும்

காற்றுமழை ஊழியிலும் சாகாது

கம்பனவன் பாட்டு, அது

தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”

எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.

கம்பன் கவிதை எழுதுவதற்கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசித்ததை அனுபவித்து, அதனுள் கரைந்து விடாமல் படிக்கும் வாசகனை உள்ளே இழுத்து வருகிறான். தன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓசை நயத்தை உருவாக்குிறான். தம்மை உச்சிக்கு கொண்டு சேர்க்கிறான்.

உதாரணமாக

தாடகை என்ற அரக்கியைக் கம்பர் உருவாக்குகிறார்.

” இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்

பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயன

மறக்கடை அரக்கி” என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.

கம்பனின் கவிதை மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ அதில் ஒன்று சந்தம், ஓசை தரும் இன்பம் ஒரு கோடி இன்பம் என்பதற்கு எற்ப,

கம்பர் கங்கை காண் படலத்தில்

“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாேரோ

வேழ நெடும் படை……….”

எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஒசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கம்பர் கண்முன் எழுப்புகிறார்.

“உறங்குகின்ற கும்பகன்ன! வுங்கண் மாய வாழவெ லாம்

இறங்குகின்றது! இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்!

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,

உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!”

மேற்சொன்ன கவிதைகளை உற்று நோக்கும்போது சந்தக் கவிதையில் சிறகடித்து பறக்கும் தமிழ் நெடிய உலகில் கம்பனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறிய முடிகிறது.

 கம்பராமாயணம் – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி _____________ எனப் பெயரிட்டார்.

விடை : “இராமாவதாரம்”

2. இராமாவதாரம் _____________ என வழங்கப்பெறுகிறது.

விடை : கம்பராமாயணம்

3. கம்பராமாயணப் பாடல்கள் _____________ மிக்கவை.

விடை : சந்தநயம்

4. கம்பர் சாேழ நாட்டுத் _____________ சார்ந்தவர்;

விடை : திருவழுந்தூரைச்

5. கம்பர் _____________ ஆதரிக்கப் பெற்றவர்;

விடை : திருெவண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால்

II. சிறு வினா

1. கம்பனின் பெருமையை சுட்டும் தொடர்கள் யாவை?

கல்வியில் பெரியவர் கம்பர்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்

விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்

2. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?

சரசுவதி அந்தாதி

சடகோபர் அந்தாதி

திருக்கை வழக்கம்

ஏரெழுபது

சிலை எழுபது

3. கம்பராமாயணம் குறிப்பு வரைக

இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.

கம்பர் தான் எழுதிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்

ஆறு காண்டங்களை உடையது

சந்த நயம் மிக்கது

4. கம்பர் சிறு குறிப்பு வரைக

“கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீடுக்கட்டுத்தறியும் கவிபாடும் போன்ற முதுமொழிக்கு உரியவர்

சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.

திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.

விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழ் பெற்றவர்

சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன கம்பர் இயற்றிய நூல்கள் ஆகும்

பலவுள் தெரிக

1.பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?

அ) சரயு ஆறு

ஆ) கங்கை ஆறு

இ) நர்மதை ஆறு

ஈ) யமுனை ஆறு

Answer:

அ) சரயு ஆறு

2.கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?

அ) செண்பகம்

ஆ) கமுகு

இ) குருக்கத்தி

ஈ) கொன்றை

Answer:

இ) குருக்கத்தி

3.கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?

அ) இராமகாதை

ஆ) இராமாயணம்

இ) கம்பராமாயணம்

ஈ) இராமாவதாரம்

Answer:

ஈ) இராமாவதாரம்

4.பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்

ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்

இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்

ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்

Answer:

ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்

5.‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் …………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) கம்பதாசன்

Answer:

அ) பாரதியார்

6.கம்பர் பிறந்த ஊர் …………….

அ) திருவழுந்தூர்

ஆ) திருக்கடையூர்

இ) திருவாரூர்

ஈ) திருவெண்காடு

Answer:

அ) திருவழுந்தூர்

7.கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்…………….

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer:

அ) ஆறு

8.கம்பர் பிறந்த நாடு …………….

அ) பாண்டிய நாடு

ஆ) சோழ நாடு

இ) சேரநாடு

ஈ) பல்லவ நாடு

Answer:

ஆ) சோழ நாடு

9.சடையப்ப வள்ளலின் ஊர் …………….

அ) தென்காசி

ஆ) திருவெண்ணெய் நல்லூர்

இ) திருநெல்வேலி

ஈ) திருவழுந்தூர்

Answer:

ஆ) திருவெண்ணெய் நல்லூர்

10.‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று புகழப்பட்டவர் …………….

அ) புகழேந்தி

ஆ) செயங்கொண்டார்

இ) கம்பர்

ஈ) ஒட்டக்கூத்தர்

Answer:

இ) கம்பர்


11.கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) சரசுவதி அந்தாதி

ஆ) பதிற்றுப் பந்தாதி

இ) திருக்கை வழக்கம்

ஈ) ஏரெழுபது

Answer:

ஆ) பதிற்றுப் பந்தாதி

12.சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர் …………….

அ) கம்பர்

ஆ) புகழேந்தி

இ) ஒட்டக்கூத்தர்

ஈ) ஔவையார்

Answer:

அ) கம்பர்


13.உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் …………….படலம்…………….

அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்

ஆ) பாலகாண்டம், நாட்டுப்படலம்

இ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்

ஈ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்

Answer:

அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்


14.‘தாதுகு சோலைதோறுஞ்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?

அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்

ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்

இ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்

ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்

Answer:

ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்


15.ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது …………….

அ) சரயு

ஆ) யமுனை

இ) பிரம்மபுத்திரா

ஈ) கங்கை

Answer:

அ) சரயு


16.“தண்டலை மயில்களாட” – என்று இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதால் தோற்றமாகக் கம்பன் எடுத்தியம்பும் காண்டம்…………….

அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்

ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்

இ) அயோத்தியா காண்டம், கங்கைப்படலம்

ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்

Answer:

அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்


17.‘வண்மையில்லை’ என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது…………….

அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை

ஆ) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை

இ) அல்வழி நல்வழி அறிதல்

ஈ) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்

Answer:

அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை


18.‘ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவா ரோ?

வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?’ இப்பாடலில் அமைந்த நயங்கள் யாவை?

அ) எதுகை

ஆ) மோனை

இ) முரண்

ஈ) அந்தாதி

Answer:

அ) எதுகை


19.பொருத்திக் காட்டுக.

i) தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்

ii) தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்

iii) வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்

iv) ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்

அ) 1, 2, 3, 4

இ) 2, 3, 4, 1

ஆ) 4, 3, 2, 1

ஈ) 1, 4, 3, 2

Answer:

அ) 1, 2, 3, 4

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...