Daily TN Study Materials & Question Papers,Educational News

இயல் 1 விரிவானம் புயலிலே ஒரு தோணி - 10th tamil - puyalile oru thoni

இயல் 1 விரிவானம் புயலிலே ஒரு தோணி

இயற்றியவர் ப.சிங்காரம்

நுழையும்முன்

இயற்கையின்‌ அசைவு சீற்றமாய்‌, ஊழித்‌ தாண்டவமாக மாறுகையில்‌ எதிர்‌ நிற்க இயலாமல்‌ நாம்‌ தவிக்கிறோம்‌. கடலில்‌ கப்பலைச்‌ சுருட்டிச்‌ செல்ல எத்தனிக்கும்‌ புயலின்‌ பெருங்காட்சியைப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறது இக்கதை. புயலின்‌ சீற்றத்தையும்‌, அதன்‌ வெறியாட்டத்தையும்‌, கப்பலின்‌ தத்தளிப்பையும்‌, பயணிகளின்‌ அச்சத்தையும்‌ இந்நெடுங்கதையின்‌ மொழி வீச்சு, கண்முன்‌ நிறுத்துகிறது. இந்தக்‌ கதை வெளிப்படுத்தும்‌ மொழியின்‌ ஆற்றலை உணர்ந்து வியப்போம்‌!

 

புலம்பெயர்ந்த தமிழர்களில்‌ இந்நூலாசிரியரான ப.சிங்காரமும்‌ ஒருவர்‌. இவர்‌

இந்தோனேசியாவில்‌ இருந்தபோது இரண்டாம்‌ உலகப்போர்‌ நிகழ்ந்தது. ஆசிரியரின்‌ நேரடி அனுபவங்களோடு கற்பனையும்‌ கலந்த கதைதான்‌ புயலிலே ஒரு தோணி என்னும்‌ புதினம்‌. பாண்டியன்‌ இப்புதினத்தின்‌ கதைநாயகன்‌. அவன்‌ கடற்பயணத்தில்‌ கண்ட காட்சிகளும்‌ அதன்‌ தொடர்ச்சியாக நடைபெறும்‌ நிகழ்வுகளும்தான்‌ இக்கதைப்பகுதி.

 

கொளுத்திக்கொண்டிருந்த வெயில்‌ இமைநேரத்தில்‌ மறைந்துவிட்டது: புழுங்கிற்று. பாண்டியன்‌ எழுந்துபோய்‌ அண்ணாந்து பார்த்தான்‌. மேகப்‌ பொதிகள்‌ பரந்து திரண்டு ஒன்றிக்‌ கும்மிருட்டாய்‌ இறுகி நின்றன. அலைகள்‌ எண்ணெய்‌ பூசியவை போல்‌ மொழுமொழுவென நெளிந்தன. காற்றையே காணோம்‌. ஒரே இறுக்கம்‌.

 

கிடுகிடுக்கும்‌ இடி முழக்கத்துடன்‌ மின்னல்‌ கீற்றுகள்‌ வானைப்‌ பிளந்தன. வானம்‌

உடைந்து கொட்டுகொட்டென்று வெள்ளம்‌ கொட்டியது. சூறாவளி மாரியும்‌ காற்றும்‌

கூடிக்கலந்து ஆடிக்‌ குதித்துக்‌ கெக்கலித்தன. தொங்கான்‌ அப்படியும்‌ இப்படியுமாய்த்‌ தாவிக்குதித்து விழுந்து திணறித்‌ தத்தளிக்கிறது. தொங்கான்‌ -கப்பல்‌

 

படம் புயல் காற்றில் சிக்கி கலங்கும் கப்பல் கடலில் செல்லும் காட்சி படமாக இடம் பெற்றுள்ளது

எலும்புகள்‌ முறிவதுபோல்‌ நொறு நொறு நொறுங்கல்‌ ஒலி. தலைக்கு மேல்‌ கடல்‌...

இருளிருட்டு, இருட்டிருட்டு, கடல்‌ மழை புயல்‌ வானம்‌... எங்கிருந்தோ தொங்கிய

வடக்கயிற்றை வலக்கையால்‌ பற்றிக்‌ கிடந்தான்‌ பாண்டியன்‌.

 

திடுமென அமைதி பாய்ந்து வந்து மிரட்டியது. வானும்‌ கடலும்‌ பிரிந்து தனித்துத்‌

தென்பட்டன.

 

பலகை அடைப்புக்குள்ளிருந்து கப்பித்தான் கத்துகிறான்:

 

கப்பித்தான்‌ - தலைமை மாலுமி (கேப்டன்‌)‌

 

ஓடி வாருங்கள்‌! இங்கே ஓடி வாருங்கள்‌!

 

பாண்டியன்‌ எழுந்தான்‌. எங்கெங்கோ இடுக்குகளில்‌ முடங்கிக்‌ கிடந்த உருவங்கள்‌ தலைதூக்கின. தொங்கான்‌ தள்ளாடுகிறது - அலைகள்‌ - மலைத்தொடர்‌ போன்ற அலைகள்‌ மோதித்‌ தாக்குகின்றன. தட்டுத்‌ தடுமாறி நடந்தோடினர்‌.

 

வானும்‌ கடலும்‌ வளியும்‌ மழையும்‌ மீண்டும்‌ ஒன்று கூடிக்‌ கொந்தளிக்கின்றன. வானம்‌ பிளந்து தீ கக்குகிறது. மழை வெள்ளம்‌ கொட்டுகிறது. வளி, முட்டிப்‌ புரட்டுகிறது. கடல்‌, வெறிக்‌ கூத்தாடுகிறது. தொங்கான்‌ நடுநடுங்கித்‌ தாவித்‌ தாவிக்‌ குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. முகத்தில்‌ வெள்ளம்‌. உடலில்‌ வெள்ளம்‌. கால்‌ கையில்‌ வெள்ளம்‌. உடை, உடலை இறுக்கியிறுக்கி ரம்பமாய்‌ அறுக்கிறது. தொங்கான்‌ தாவி விழுந்து சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது. தாவி நீந்துகிறது. இருட்டிருட்டு. கும்மிருட்டு. குருட்டிருட்டு. சிலுசிலு மரமரப்பு. கொய்ங்‌ புய்ங்‌ கொய்ங்‌ புய்ங்‌ கொய்ங்‌ புய்ங்‌. இடி முழக்கச்‌ சீனப்‌ பிசாசுகள்‌ தாவி வீசுகின்றன. மூட்டைகள்‌ சிப்பங்கள்‌ நீந்தியோடி மறைகின்றன. தொங்கான்‌ குதித்து விழுந்து நொறு நொறு நொறுங்குகிறது. சுழன்று கிறுகிறுத்துக்‌ கூத்தாடுகிறது. கடலலை அடிக்கிறது...

 

என்னயிது! சூரிய வெளிச்சம்‌! சூரியன்‌! சூரியன்‌! சூரியன்‌!... தொங்கானில்‌ நீர்‌ தெளிகிறது. பாய்மரம்‌ ஒடிந்து கிடக்கிறது. பொத்துக்‌ கொப்புளிக்கும்‌ பவ்வ நீரை மாலுமிகள்‌ இறைத்து ஊற்றுகின்றனர்‌. ஓட்டையை அடைக்கிறார்கள்‌. ஆப்பு அடிக்கிறார்கள்‌. மரம்‌ வெட்டுகிறார்கள்‌, செதுக்குகிறார்கள்‌...

 

தொங்கானின்‌ இருபுறமும்‌, பின்னேயும்‌ தேயிலைப்‌ பெட்டிகளும்‌ புகையிலைச்‌ சிப்பங்களும்‌ மிதந்து வருகின்றன.

 

பாண்டியன்‌ நாற்புறமும்‌ கடலைப்‌ பார்த்து மலைத்து நின்றான்‌.

 

கடற்கூத்து எவ்வளவு நேரம்‌ நீடித்ததென்று கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்தபோதோ, முடிந்து வெகுநேரம்‌ வரையிலோ யாரும்‌ கடிகாரத்தைப்‌ பார்க்கவில்லை. எல்லாக்‌ கடிகாரங்களும்‌ நின்றுபோயிருந்தன.

 

தொங்கான்‌, தன்வசமின்றித்‌ தடுமாறிச்‌ செல்கிறது. கடற்கூத்தின்போது மாலுமிகளால்‌ தூக்கி எறியப்பட்ட பெட்டிகளும்‌ சிப்பங்களும்‌ மூட்டைகளும்‌ மிதந்து உடன்‌ வந்தன. புயல்‌ மயக்கத்திலிருந்து யாரும்‌ இன்னும்‌ முற்றாகத்‌ தெளிச்சி பெறவில்லை. பினாங்கு எவ்வளவு தொலைவில்‌ இருக்கிறது. எப்போது போய்ச்‌ சேரலாம்‌? பதில்‌ சொல்வார்‌ யாருமில்லை.

 

இரவில்‌ மேல்‌ தட்டுக்கு வந்து கப்பித்தான்‌ வானையும்‌ கடலையும்‌ ஒரு சுற்றுப்‌ பார்த்துவிட்டுத்‌ தலையைச்‌ சொறியலானான்‌. பாண்டியன்‌ நெருங்கிச்‌ சென்று நிலவரத்தைக்‌ கேட்டான்‌. கப்பித்தான்‌ சீனமும்‌ மலாயும்‌ கலந்த மொழியில்‌ சொன்னான்‌.

 

இனிமேல்‌ பயமில்லை. இரண்டு நாளில்‌ கரையைப்‌ பார்க்கலாம்‌.

 

அன்றிரவு யாரும்‌ உண்ணவில்லை; பேச்சாடவில்லை.

 

மறுநாள்‌ காலையில்‌ சூரியன்‌ உதித்தான்‌. கடல்‌ அலைகள்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாய்‌,

முந்தியதைத்‌ தொடர்ந்த பிந்தியதாய்‌ வந்து மொத்து மொத்தென்று தொங்கானை மோதின. பறவை மீன்கள்‌ இருபுறமும்‌ கூட்டம்‌ கூட்டமாய்ப்‌ பறந்து விளையாடின. தொங்கான்‌ மிதந்து சென்றது, கடலின்‌ இழுவைக்கிணங்கி.

 

பகல்‌ இரவாகி பகலாகி இரவாகியது. பிறைமதி வெளிச்சம்‌ சிந்திற்று. கருநீலவானில்‌ விண்மீன்கள்‌ வெகு ஒளியுடன்‌ கண்‌ சிமிட்டி நின்றன. உப்பங்காற்று உடலை வருடியது. அவுலியா மீன்கள்‌ கூட்டம்‌ கூட்டமாய்‌, கண்மாயில்‌ முதுகு தெரிய மூழ்கி நீந்தும்‌ எருமைகளென முனகல்‌ ஒலியோடு பின்‌ தொடர்ந்தன. அலைகள்‌ நெளிந்தோடின.

 

சிப்பம்‌ - கட்டு, பவ்வம்‌ - கடல்‌, பறவை மீன்‌- பறக்கும்‌ மீன்‌, அவுலியா மீன்‌ - கடற்பசு.

 

கடற்கூத்துக்குப்‌ பின்‌ ஐந்தாம்‌ நாள்‌ மாலையில்‌ வானோடு வானாய்க்‌ கடலோடு கடலாய்‌ மரப்பச்சை தெரிவது போலிருந்தது. சுமார்‌ அரைமணி நேரத்துக்குப்‌ பின்‌ மீன்பிடி படகு விளக்குகள்‌ தென்பட்டன.

 

கரை! கரை! கரை!

 

அடுத்தநாள்‌ முற்பகலில்‌ பினாங்குத்‌ துறைமுகத்தை அணுகினார்கள்‌. மணிக்கூண்டு தெரிகிறது. கட்டட வரிசை. தெருவில்‌ திரியும்‌ வண்டிகள்‌, ஆட்கள்‌...

 

தொங்கான்‌, கரையை நெருங்கிப்‌ போய்‌ நின்றது. தொலைதூர நாவாய்கள்‌ கரையை மொய்த்திருந்தன. ஒவ்வொன்றிலிருந்தும்‌ கேள்வி எழுந்தது. "எங்கிருந்து வருகிறீர்கள்‌? எங்கிருந்து வருகிறீர்கள்‌?

 

"பிலவான்‌... பிலவான்‌."

 

சுமத்ரா பிரயாணிகள்‌ துடுப்புப்‌ படகில்‌ இறங்கிப்‌ போய்‌ நடைப்பாலத்தில்‌ ஏறி நடந்து சுங்க அலுவலகத்திற்குச்‌ சென்று பிரயாண அனுமதிச்‌ சீட்டுகளை நீட்டினர்‌.

 

"தமிரோ?" ஜப்பானிய அதிகாரி உறுமினார்‌.

 

"யா, மஸ்தா." தமிழர்கள்தாம்‌ என்று தலைகுனிந்து வணங்கித்‌ தெரிவித்தனர்‌.

 

பிரயாணிகளைச்‌ சில விநாடிகள்‌ நோட்டமிட்ட அதிகாரி, சீட்டுகளில்‌ முத்திரை வைத்துத்‌ திருப்பிக்‌ கொடுத்தார்‌.

 

பிலவான்‌ - இந்தோனேசியாவிலுள்ள இடம்‌.

 

நூல்‌ வெளி

படம் புயலிலே ஒரு தோணி நூலாசிரியர் பா.சிங்காரம் அவர்களின் நிழல் படம் இடம்பெற்றுள்ளது

புலம்பெயர்ந்த தமிழர்கள்‌ பற்றிய முதல்‌ புதினம்‌, புயலிலே ஒரு தோணி. இந்நூலாசிரியர்‌ ப.சிங்காரம்‌ (1920 - 1997). இந்தோனேசியாவில்‌ இருந்தபோது, தென்கிழக்காசியப்‌ போர்‌ மூண்டது. அச்சூழலில்‌, மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில்‌ நிகழ்வதாக உள்ள கற்பனைப்‌ படைப்பு இப்புதினம்‌. அதில்‌ கடற்கூத்து என்னும்‌ அத்தியாயத்தின்‌ சுருக்கப்பட்ட பகுதி இங்குப்‌ பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

 

ப.சிங்காரம்‌ சிவகங்கை மாவட்டம்‌, சிங்கம்புணரியைச்‌ சேர்ந்தவர்‌; வேலைக்காக இந்தோனேசியா சென்றார்‌; மீண்டும்‌ இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில்‌ பணியாற்றினார்‌. இவர்‌ அன்றைய சூழலில்‌ அவருடைய சேமிப்பான 7.5 இலட்சம்‌ ரூபாயை மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்‌.

 

பெட்டி செய்தி

தொன்றுதொட்டு இன்றுவரை நின்று நிலவும் ஊர்களில் ஒன்று

முந்தோன்றிய மூத்தகுடி

வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்

மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்

சிலப்பதிகாரம், காடுகாண் காதை: 53 55

சிலப்பதிகாாரம் குறிப்பிடும் ஊர் திண்டுக்கல் மாாவட்டத்தின் சிறுமலை

 

கற்பவை கற்றபின்‌...

1. கடலில்‌ புயலின்‌ தாக்கத்தினால்‌ ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்த அடுக்குத்‌ தொடர்களும்‌ வருணனைகளும்‌ எவ்வாறெல்லாம்‌ பயன்பட்டுள்ளன என்பது குறித்து வகுப்பில்‌ பேசுக. (விழுவிழுந்து, நொறுநொறு)

 

2. நீங்கள்‌ எதிர்கொண்ட இயற்கை இடர்‌ குறித்து விவரித்து எழுதி வகுப்பில்‌

காட்சிப்படுத்துக. (மழை, வெள்ளம்‌, புயல்‌, வறட்சி)

Share:

இயல் 1 கவிதைப்பேழை காலக்கணிதம்‌ - 10th tamil -kalak kanitham

இயல் 1 கவிதைப்பேழை காலக்கணிதம்‌

இயற்றியவர் கண்ணதாசன்‌

நுழையும்முன்

மனிதம்‌, தனி மனிதனுடைய, சமுதாயத்தினுடைய வாழ்வியல்‌ நெறியின்‌ தெளிந்த சாரம்‌. மனிதம்‌ என்பதன்‌ இலக்கணமானவன்‌ நல்ல கவிஞன்‌. கவிமனம்‌ எதைச்‌ சரியென்று கருதுகிறதோ அதைத்‌ துணிந்து சொல்லும்‌; செல்வத்திற்கோ பதவிக்கோ அடிபணியாது; பிறருக்குப்‌ பகிர்ந்து கொடுக்கும்‌; மாற்றம்‌ என்பது மனிதத்தின் இயல்பு. எதையும் மறைக்காமல் துணிந்து சொல்வதும் மனிதத்தின் இயல்பு. மனிதமும்‌ கவித்துவமும்‌ ஒன்றிணைந்த நிலையே இக்கவிதையின்‌. சாரம்‌.

படம் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதையின் பொருளை வெளிப்படுத்தும் முகம் வரையப்பட்ட கருத்துப்படம் இடம் பெற்றுள்ளது.

கவிஞன்‌ யானோர்‌ காலக்‌ கணிதம்‌

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்‌!

புவியில்‌ நானோர்‌ புகழுடைத்‌ தெய்வம்‌

பொன்னினும்‌ விலைமிகு பொருளென்‌ செல்வம்‌!

இவைசரி யென்றால்‌ இயம்புவதென்‌ தொழில்‌

இவைதவ றாயின்‌ எதிர்ப்பதென்‌ வேலை!

ஆக்கல்‌ அளித்தல்‌ அழித்தல்‌இம்‌ மூன்றும்‌

அவனும்‌ யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங்‌ கையில்‌ சிறைப்பட மாட்டேன்‌;

பதவி வாளுக்கும்‌ பயப்பட மாட்டேன்‌!

பாசம்‌ மிகுத்தேன்‌; பற்றுதல்‌ மிகுத்தேன்‌!

ஆசை தருவன அனைத்தும்‌ பற்றுவேன்‌!

உண்டா யின்பிறர்‌ உண்ணத்‌ தருவேன்‌;

இல்லா யின்‌எமர்‌ இல்லம்‌ தட்டுவேன்‌

வண்டா யெழுந்து மலர்களில்‌ அமர்வேன்‌

வாய்ப்புறத்‌ தேனை ஊர்ப்புறந்‌ தருவேன்‌!

பண்டோர்‌ கம்பன்‌, பாரதி, தாசன்‌

சொல்லா தனசில சொல்லிட முனைவேன்‌!

புகழ்ந்தால்‌ என்னுடல்‌ புல்லரிக்‌ காது

இகழ்ந்தால்‌ என்மனம்‌ இறந்து விடாது!

வளமார்‌ கவிகள்‌ வாக்குமூலங்கள்‌

இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய்‌ மரமாய்க்‌ காடுமே டாக

 

மாறா திருக்கயான்‌ வனவிலங் கல்லன்‌!

மாற்றம்‌ எனது மானிடத்‌ தத்துவம்‌;

மாறும்‌ உலகின்‌ மகத்துவம்‌ அறிவேன்‌!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென்‌ சாலை!

தலைவர்‌ மாறுவர்‌; தர்பார்‌ மாறும்‌;

தத்துவம்‌ மட்டுமே அட்சய பாத்திரம்‌!

கொள்வோர்‌ கொள்க; குரைப்போர்‌ குரைக்க!

உள்வாய்‌ வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்‌; நானே முடிவு;

நானுரைப்‌ பதுதான்‌ நாட்டின்‌ சட்டம்‌!

- கண்ணதாசன்‌

 

நூல்‌ வெளி

'காலக்கணிதம்‌' என்னும்‌ இப்பாடப்பகுதி, கண்ணதாசன்‌ கவிதைகள்‌ என்னும்‌ தொகுப்பில்‌ இடம்பெற்றுள்ளது.

முத்தையா' என்னும்‌ இயற்பெயரைக்‌ கொண்ட கண்ணதாசன்‌ இன்றைய சிவகங்கை மாவட்டத்தின்‌ சிற்றூரான சிறுகூடல்பட்டியில்‌ பிறந்தவர்‌. இவரது பெற்றோர்‌ சாத்தப்பன்‌ விசாலாட்சி ஆவர்‌. 1949ஆம்‌ ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, இவர்‌ திரைப்படப்‌ பாடலாசிரியரானார்‌. திரையுலகிலும்‌ இலக்கிய உலகிலும்‌ சிறந்து விளங்கியவர்‌ கண்ணதாசன்‌. இவர்‌ சிறந்த கவியரங்கக்‌ கவிஞராகவும்‌ பேச்சாளராகவும்‌ திகழ்ந்தவர்‌; தனது திரைப்படப்‌ பாடல்கள்‌ வழியாக எளிய முறையில்‌ மெய்யியலை (Philosophy) மக்களிடையே கொண்டு சேர்த்தவர்‌; சேரமான்‌ காதலி என்னும்‌ புதினத்திற்காக சாகித்திய

அகாதெமி விருது பெற்றவர்‌. இவர்‌ தமிழ்நாடு அரசின்‌ அரசவைக்‌ கவிஞராகவும்‌ ஆக்கப்பட்டுச்‌ சிறப்புப்பெற்றுள்ளார்‌.

கற்பவை கற்றபின்‌...

1. கவிதைகளை ஒப்பிட்டுக்‌ கருத்துரைக்க.

 

கவிச்சக்கரவர்த்தியும்‌ கவியரசும்‌

 

நதியின்‌ பிழையன்று; நறும்புனலின்மை; அற்றே

பதியின்‌ பிழையன்று; பயந்து நமைப்‌ புரந்தாள்‌

மதியின்‌ பிழையன்று; மகன்‌ பிழையன்று; மைந்த!

விதியின்‌ பிழை; நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்‌

- கம்பன்‌

 

நதிவெள்ளம்‌ காய்ந்து விட்டால்‌

நதிசெய்த குற்றம்‌ இல்லை

விதிசெய்த குற்றம்‌ அன்றி

வேறு- யாரம்மா!

- கண்ணதாசன்‌

 

2. கண்ணதாசனின்‌ கவியரங்கக்‌ கவிதையைச்‌ சுவைத்து அது குறித்து உரையாற்றுக.

 

கதிர்‌ வெடித்துப்‌ பிழம்பு விழ

கடல்‌ குதித்துச்‌ சூடாற்ற

முதுமை மிகு நிலப்‌ பிறப்பின்‌

முதற்‌ பிறப்புத்‌ தோன்றி விட

நதி வருமுன்‌ மணல்‌ தரு முன்‌

நலம்‌ வளர்த்த தமிழணங்கே

பதி மதுரைப்‌ பெருவெளியில்‌

பாண்டியர்‌ கை பார்த்தவளே!

நின்னை யான்‌ வணங்குவதும்‌

நீ என்னை வாழ்த்துவதும்‌

அன்னை மகற்கிடையே

அழகில்லை என்பதனால்‌

உன்னை வளர்த்து வரும்‌

ஒண்‌ புகழ்‌ சேர்‌ தண்‌ புலவர்‌

தன்னை வணங்குகின்றேன்‌

தமிழ்ப்‌ புலவர்‌ வாழியரோ!

Share:

இயல்‌ 1 உரைநடை உலகம் பாவாணர்‌ பார்வையில்‌ தமிழ்ச்சொல்‌ வளம்‌ - 10th tamil

இயல்‌ 1 உரைநடை உலகம் பாவாணர்‌ பார்வையில்‌ தமிழ்ச்சொல்‌ வளம்‌

நுழையும்முன்‌

"நாடும்‌ மொழியும்‌ நமது இரு கண்கள்‌ என்கிறார்‌ மகாகவி பாரதியார்‌. காலவெள்ளத்தில்‌ கரைந்துபோன மொழிகளுக்கிடையில்‌ நீந்தித்‌ தன்னை நிலைநிறுத்திக்‌ கொண்டுள்ளது தமிழ்‌. என்ன வளம்‌ இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக்‌ கொண்டு இலங்குகிறது நம்‌ செந்தமிழ்‌ மொழி. தமிழின்‌ சொல்வளத்தை உணர்ந்த பாவாணர்‌ அதன்‌ சொல்வளத்தின்‌ ஒரு பகுதியை மட்டும்‌ எடுத்துக்காட்டி விளக்குகிறார்‌. அவர்‌ கருத்தின்‌ வழியே கடலெனப்‌ பரந்த தமிழ்ச்சொல்வளத்தை அறியலாம்‌.

 

தமிழ்‌ மொழி உலகின்‌ மூத்த மொழியாகவும்‌ உயர்தனிச்‌ செம்மொழியாகவும்‌ திகழ்கிறது. மேலும்‌, அது காலத்திற்கு ஏற்பத்‌ தன்னை வளர்த்துக்கொண்டே இருப்பதால்‌ சொல்வளம்‌ நிறைந்த, நிலைத்த மொழியாக விளங்கி வருகிறது. ஒவ்வொன்றையும்‌ தனித்தனியான சொற்களைக்‌ கொண்டு சொற்பஞ்சம்‌ இல்லாமல்‌ அழைப்பது தமிழ்மொழியின்‌ தனிச்சிறப்பு. இச்சிறப்பினை ஆய்வு செய்த அறிஞர்களுள்‌ பாவாணர்‌ குறிப்பிடத்தக்கவர்‌. மொழிஞாயிறு என்று போற்றப்படும்‌ பாவாணரின்‌ தமிழ்ச்சொல்வளம்‌ பற்றிய கருத்துகளும்‌ விளக்கங்களும்‌ தமிழ்மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

 

நாட்டுவளமும்‌ சொல்வளமும்‌

ஒரு நாட்டின்‌ வளமும்‌ அங்கு வழங்கும்‌ சொற்களின்‌ வளமும்‌ தொடர்புடையன என்கிறார்‌ பாவாணர்‌. நாட்டுவளம்‌ சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம்‌ நாட்டுவளத்தை உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, இலைக்குத்‌ தரப்பட்டுள்ள பல பெயர்களைச்‌ சொல்லலாம்‌. இலையின்‌ வன்மை, மென்மை ஆகிய தன்மைகளைக்‌ கொண்டு தாள்‌, ஓலை, தோகை, இலை எனத்‌ தமிழில்‌ பலவகைப்‌ பெயர்கள்‌ அமைந்திருக்கின்றன. ஆனால்‌, ஆங்கிலமொழியில்‌ இலையைக்‌ குறிக்க leaf என்னும்‌ ஒரு சொல்லே

பயன்படுத்தப்படுகிறது.

 

விளைபொருள்களின்‌ மிகுதியாலும்‌ சொல்வளம்‌ பெருகுகிறது. தமிழ்நாட்டில்‌ பலவகைத்‌ தானியங்கள்‌ விளைகின்றன. குறிப்பாக, இங்கு ஏராளமான நெல்வகைகள்‌ விளைவிக்கப்படுகின்றன. செந்நெல்‌, வெண்ணெல்‌, கார்நெல்‌, சம்பா, மட்டை எனப்‌ பல வகைகள்‌ விளைகின்றன. அவற்றுள்‌ சம்பா நெல்வகையின்‌ சில பெயர்களைத்‌ தெரிந்துகொள்வோம்‌. ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன்‌ சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்‌ சம்பா, சிறுமணிச்‌ சம்பா, சீரகச்சம்பா போன்ற வகைப்பெயர்கள்‌ சொல்வளத்தை உணர்த்த உதவுகின்றன. மேலும்‌, வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய தானியங்கள்‌ தமிழ்நாட்டைத்‌ தவிர வேறெங்கும்‌ விளைவதில்லை. இவ்விளைச்சலால்‌, தமிழில்‌ அது சார்ந்த சொல்வளம்‌ பெருகியிருக்கிறது.

 

பயிர்களின்‌ அடிப்பகுதி, கிளைப்பகுதி, இலை, காய்‌, கனி, தோல்‌, மணி, இளம்பயிர்‌

முதலானவற்றைக்‌ குறிப்பதற்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள்‌ உள்ளன. அவற்றை

வகைப்படுத்துவதன்‌ மூலம்‌ தமிழ்ச்‌ சொல்வளம்‌, பாவாணரால்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அடியின்‌ பெயர்‌ வகை

தாவரங்களின்‌ அடிப்பகுதியை வெவ்வேறான சொற்களில்‌ குறிப்பிடும்‌ வழக்கம்‌

பாவாணரால்‌ எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

படம் தமிழ் சொல் வளம் நெல் கேழ்வரகு இவற்றின் தாள் கீரை வாழை போன்றவற்றின் தண்டு நெட்டி மிளகாய் செடி இவற்றின் கோல் கரும்பு மூங்கில் இவற்றுடன் புளி வேம்பு   போன்றவற்றின் அடி இவை பற்றிய படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

தெரியுமா?

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்‌ நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல்‌ மொழியும்‌ தமிழே.

பன்மொழிப்‌ புலவர்‌ கா.அப்பாத்துரையார்‌

 

கிளைப்பெயர்‌ வகை

தாவரங்களின்‌ அடிப்பகுதியிலிருந்து கிளைத்துச்‌ செல்லும்‌ கிளைகளுக்குத்‌ தனித்தனிப்‌ பெயர்கள்‌ வழங்கப்படுகின்றன.

 

அடி மரத்தினின்று பிரியும்‌

மாபெரும்‌ கிளை கவை எனப்படுகிறது.

கவையில்‌ இருந்து பிரிவது கொம்பு (அ) கொப்பு.

கொம்பில்‌ இருந்து பிரிவது சிறு கிளை.

கிளையில்‌ இருந்து பிரிவது சினை.

சினையில்‌ இருந்து பிரிவது போத்து.

போத்தில்‌ இருந்து பிரிவது குச்சி.

குச்சியில்‌ இருந்து பிரிவது இணுக்கு

என்று பாவாணர்‌ எடுத்துக்காட்டியுள்ளார்‌.

 

படம் ஒரு மரத்தின் முழுமையான படம் கொடுக்கப்பட்டுள்ளது

இலைப்பெயர்‌ வகை

ஒவ்வொரு தாவரத்தின்‌ இலைக்கும்‌ வேறு பெயர்‌ இருப்பதும்‌ காய்ந்த இலைக்குக்‌ கூட வேறு பெயர்‌ இருப்பதும்‌ இவரால்‌ எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

 

காய்ந்த தாள்‌, தோகையைக்‌ குறிப்பது 'சண்டு' என்றும்‌, காய்ந்த இலையைக்‌ குறிப்பது 'சருகு' என்றும்‌ அழைக்கப்படுவதையும்‌ இவர்‌ நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார்‌.

படம் ஒவ்வொரு தாவரத்தின் இலைக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன புளி வேம்பு போன்றவற்றிற்கு இலை நெல்புல் போன்ற தாவரத்தின் இலைக்கு தாள் சோளம் கரும்பு போன்ற தாவரத்தின் இலைக்கு தோகை தென்னை பனை போன்றவற்றின் இலை ஓலை பற்றிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

குலைப்பெயர்‌ வகை

காய்கள்‌, கனிகள்‌ ஆகியன மொத்தமாகத்‌ தொகுதியாகக்‌ காய்த்திருப்பதற்கும்‌ தாவரங்களுக்கு ஏற்ப வேறுவேறு பெயர்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

 

படம் குலைப்பெயர் வகைகளில் அவரை துவரை திராட்சைக் குலை வாழைத்தாறு கேழ்வரகு கதிர் இவற்றின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

பழத்தோலின்‌ பெயர்‌ வகை

பல்வேறு பழங்களின்‌ மேற்பகுதியைக்‌ குறிக்க வேறுவேறு சொற்கள்‌ உள்ளதை

அறிந்துகொள்ள முடிகிறது. மிக மெல்லிய பழத்தோல்‌ வகை, தொலி எனப்படுகிறது. பழத்தோலின்‌ மேற்பகுதி திண்ணமாக இருந்தால்‌ தோல்‌, வன்மையாக இருந்தால்‌ ஓடு எனப்படுகிறது. முழுச்சுரையின்‌ ஓடு, குடுக்கை என்றும்‌ தேங்காய்‌ நெற்றின்‌ மேற்பகுதி, மட்டை என்றும்‌ வழங்கப்படுகின்றன.

 

மணிப்பெயர்‌ வகை

தானியங்கள்‌ என்று பொதுவாக நாம்‌ அறிந்தவற்றிற்கும்‌ வேறுவேறு பெயர்கள்‌

உள்ளன. தாவரங்களில்‌ விளையும்‌ தானியங்களை மணி என்போம்‌. இந்த மணி என்பதற்குப்‌ பல்வேறு பெயர்கள்‌ உள்ளன.

தானியங்கள்

குறிக்கும்‌ சொல்‌

நெல்‌, புல்‌ (கம்பு முதலிய தானியங்கள்‌)

கூலம்‌

அவரை, உளுந்து

பயிறு

வேர்க்கடலை, கொண்டைக்கடலை

கடலை

கத்தரி, மிளகாய்‌

விதை

புளி, காஞ்சிரை (நச்சு மரம்‌)

காழ்‌

வேம்பு, ஆமணக்கு

முத்து

மா, பனை

கொட்டை

தென்னை

தேங்காய்

அவரை, துவரை

முதிரை

 

இளம்பயிர்களின்‌ பெயர்‌ வகை

தாவரங்களின்‌ இளம்பருவத்தையும்‌ பல்வேறு சொற்களின்‌ மூலமாக அறியலாம்‌. நெல்‌, கத்தரி முதலியவற்றின்‌ இளநிலை, 'நாற்று' எனவும்‌ மா, புளி, வாழை முதலியவற்றின்‌ இளநிலை 'கன்று' எனவும்‌ வழங்கப்படுகின்றன. 'பிள்ளை' என்பது தென்னையின்‌ இளநிலையைக்‌ குறிக்கின்றது. பனையின்‌ இளநிலையானது 'மடலி' அல்லது 'வடலி' என வழங்கப்படுகிறது.

 

பல சொல்‌ வகைகள்‌

வித்துவகை, வேர்வகை, பூ வகை, காய்‌ வகை, கனி வகை உள்ளிட்ட இருபதுக்கும்‌ மேற்பட்ட தாவரங்கள்‌ சார்ந்த பல்வேறு பகுதிகளைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்‌ தமிழ்ச்‌ சொல்வளத்தின்‌ சிறப்பைப்‌ புலப்படுத்துவதைப்‌ பாவாணர்‌ எடுத்துக்காட்டுகிறார்‌.

 

சொல்வளம்‌ நிறைந்த மொழியானது, அது பயன்படுத்தப்படும்‌ நாட்டின்‌ வளத்தையும்‌ நாகரிகத்தையும்‌ உணர்த்துவதுடன்‌, பொருளைக்‌ கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்யும்‌ மக்களின்‌ மதிநுட்பத்தையும்‌ உணர்த்துகிறது. இதைப்‌ பகுத்தும்‌ தொகுத்தும்‌ வகைப்படுத்தியுள்ள பாவாணரின்‌ தமிழ்ச்சொல்வளம்‌ பற்றிய கருத்துகளை உணர்ந்து மொழியைப்‌ பயன்படுத்துவோம்‌.

நூல்‌ வெளி

படம் மொழி ஞாயிறு என்று அழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் நிழல் படம் இடம் பெற்றுள்ளது .

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்‌ தேவநேயப்‌ பாவாணரின்‌ "சொல்லாய்வுக்‌ கட்டுரைகள்‌" நூலில்‌ உள்ள தமிழ்ச்சொல்‌ வளம்‌ என்னும்‌ கட்டுரையின்‌ கருத்து பாடமாகத்‌ தரப்பட்டுள்ளது. இக்கட்டுரையில்‌ சில விளக்கக்‌ குறிப்புகள்‌ மாணவர்களின்‌ புரிதலுக்காகச்‌ சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கணக்‌ கட்டுரைகளையும்‌ மொழியாராய்ச்சிக்‌ கட்டுரைகளையும்‌ எழுதிய பாவாணர்‌, தமிழ்ச்‌ சொல்லாராய்ச்சியில்‌ உச்சம்‌ தொட்டவர்‌. செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ அகரமுதலித்‌ திட்ட இயக்குநராகப்‌ பணியாற்றியவர்‌; உலகத்‌

தமிழ்க்‌ கழகத்தை நிறுவித்‌ தலைவராக இருந்தவர்‌.

 

பெட்டி செய்தி

அலைகடல்‌ தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும்‌ பரவிய தமிழினத்தின்‌ ஒரு பதிவு எத்திசையும்‌ புகழ்‌ மணக்க...

கடல்கடந்து முதலில்‌ அச்சேறிய தமிழ்‌

போர்ச்சுகீசு நாட்டின்‌ தலைநகர்‌ லிசுபனில்‌, 1554இல்‌ கார்டிலா என்னும்‌ நூல்‌ முதன்‌ முதலாகத்‌ தமிழ்மொழியில்தான்‌ மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல்‌ ரோமன்‌ வரிவடிவில்‌ அச்சிடப்பட்டுள்ளது. ரோமன்‌ எழுத்துருவில்‌ வெளிவந்த இதன்‌ முழுப்பெயர்‌ Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில்‌ மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில்‌ முதலில்‌ அச்சேறியது தமிழ்தான்‌.

செய்தி ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support