Daily TN Study Materials & Question Papers,Educational News

இயல்‌ 1 உரைநடை உலகம் பாவாணர்‌ பார்வையில்‌ தமிழ்ச்சொல்‌ வளம்‌ - 10th tamil

இயல்‌ 1 உரைநடை உலகம் பாவாணர்‌ பார்வையில்‌ தமிழ்ச்சொல்‌ வளம்‌

நுழையும்முன்‌

"நாடும்‌ மொழியும்‌ நமது இரு கண்கள்‌ என்கிறார்‌ மகாகவி பாரதியார்‌. காலவெள்ளத்தில்‌ கரைந்துபோன மொழிகளுக்கிடையில்‌ நீந்தித்‌ தன்னை நிலைநிறுத்திக்‌ கொண்டுள்ளது தமிழ்‌. என்ன வளம்‌ இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக்‌ கொண்டு இலங்குகிறது நம்‌ செந்தமிழ்‌ மொழி. தமிழின்‌ சொல்வளத்தை உணர்ந்த பாவாணர்‌ அதன்‌ சொல்வளத்தின்‌ ஒரு பகுதியை மட்டும்‌ எடுத்துக்காட்டி விளக்குகிறார்‌. அவர்‌ கருத்தின்‌ வழியே கடலெனப்‌ பரந்த தமிழ்ச்சொல்வளத்தை அறியலாம்‌.

 

தமிழ்‌ மொழி உலகின்‌ மூத்த மொழியாகவும்‌ உயர்தனிச்‌ செம்மொழியாகவும்‌ திகழ்கிறது. மேலும்‌, அது காலத்திற்கு ஏற்பத்‌ தன்னை வளர்த்துக்கொண்டே இருப்பதால்‌ சொல்வளம்‌ நிறைந்த, நிலைத்த மொழியாக விளங்கி வருகிறது. ஒவ்வொன்றையும்‌ தனித்தனியான சொற்களைக்‌ கொண்டு சொற்பஞ்சம்‌ இல்லாமல்‌ அழைப்பது தமிழ்மொழியின்‌ தனிச்சிறப்பு. இச்சிறப்பினை ஆய்வு செய்த அறிஞர்களுள்‌ பாவாணர்‌ குறிப்பிடத்தக்கவர்‌. மொழிஞாயிறு என்று போற்றப்படும்‌ பாவாணரின்‌ தமிழ்ச்சொல்வளம்‌ பற்றிய கருத்துகளும்‌ விளக்கங்களும்‌ தமிழ்மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

 

நாட்டுவளமும்‌ சொல்வளமும்‌

ஒரு நாட்டின்‌ வளமும்‌ அங்கு வழங்கும்‌ சொற்களின்‌ வளமும்‌ தொடர்புடையன என்கிறார்‌ பாவாணர்‌. நாட்டுவளம்‌ சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம்‌ நாட்டுவளத்தை உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, இலைக்குத்‌ தரப்பட்டுள்ள பல பெயர்களைச்‌ சொல்லலாம்‌. இலையின்‌ வன்மை, மென்மை ஆகிய தன்மைகளைக்‌ கொண்டு தாள்‌, ஓலை, தோகை, இலை எனத்‌ தமிழில்‌ பலவகைப்‌ பெயர்கள்‌ அமைந்திருக்கின்றன. ஆனால்‌, ஆங்கிலமொழியில்‌ இலையைக்‌ குறிக்க leaf என்னும்‌ ஒரு சொல்லே

பயன்படுத்தப்படுகிறது.

 

விளைபொருள்களின்‌ மிகுதியாலும்‌ சொல்வளம்‌ பெருகுகிறது. தமிழ்நாட்டில்‌ பலவகைத்‌ தானியங்கள்‌ விளைகின்றன. குறிப்பாக, இங்கு ஏராளமான நெல்வகைகள்‌ விளைவிக்கப்படுகின்றன. செந்நெல்‌, வெண்ணெல்‌, கார்நெல்‌, சம்பா, மட்டை எனப்‌ பல வகைகள்‌ விளைகின்றன. அவற்றுள்‌ சம்பா நெல்வகையின்‌ சில பெயர்களைத்‌ தெரிந்துகொள்வோம்‌. ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன்‌ சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்‌ சம்பா, சிறுமணிச்‌ சம்பா, சீரகச்சம்பா போன்ற வகைப்பெயர்கள்‌ சொல்வளத்தை உணர்த்த உதவுகின்றன. மேலும்‌, வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய தானியங்கள்‌ தமிழ்நாட்டைத்‌ தவிர வேறெங்கும்‌ விளைவதில்லை. இவ்விளைச்சலால்‌, தமிழில்‌ அது சார்ந்த சொல்வளம்‌ பெருகியிருக்கிறது.

 

பயிர்களின்‌ அடிப்பகுதி, கிளைப்பகுதி, இலை, காய்‌, கனி, தோல்‌, மணி, இளம்பயிர்‌

முதலானவற்றைக்‌ குறிப்பதற்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள்‌ உள்ளன. அவற்றை

வகைப்படுத்துவதன்‌ மூலம்‌ தமிழ்ச்‌ சொல்வளம்‌, பாவாணரால்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அடியின்‌ பெயர்‌ வகை

தாவரங்களின்‌ அடிப்பகுதியை வெவ்வேறான சொற்களில்‌ குறிப்பிடும்‌ வழக்கம்‌

பாவாணரால்‌ எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

படம் தமிழ் சொல் வளம் நெல் கேழ்வரகு இவற்றின் தாள் கீரை வாழை போன்றவற்றின் தண்டு நெட்டி மிளகாய் செடி இவற்றின் கோல் கரும்பு மூங்கில் இவற்றுடன் புளி வேம்பு   போன்றவற்றின் அடி இவை பற்றிய படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

தெரியுமா?

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்‌ நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல்‌ மொழியும்‌ தமிழே.

பன்மொழிப்‌ புலவர்‌ கா.அப்பாத்துரையார்‌

 

கிளைப்பெயர்‌ வகை

தாவரங்களின்‌ அடிப்பகுதியிலிருந்து கிளைத்துச்‌ செல்லும்‌ கிளைகளுக்குத்‌ தனித்தனிப்‌ பெயர்கள்‌ வழங்கப்படுகின்றன.

 

அடி மரத்தினின்று பிரியும்‌

மாபெரும்‌ கிளை கவை எனப்படுகிறது.

கவையில்‌ இருந்து பிரிவது கொம்பு (அ) கொப்பு.

கொம்பில்‌ இருந்து பிரிவது சிறு கிளை.

கிளையில்‌ இருந்து பிரிவது சினை.

சினையில்‌ இருந்து பிரிவது போத்து.

போத்தில்‌ இருந்து பிரிவது குச்சி.

குச்சியில்‌ இருந்து பிரிவது இணுக்கு

என்று பாவாணர்‌ எடுத்துக்காட்டியுள்ளார்‌.

 

படம் ஒரு மரத்தின் முழுமையான படம் கொடுக்கப்பட்டுள்ளது

இலைப்பெயர்‌ வகை

ஒவ்வொரு தாவரத்தின்‌ இலைக்கும்‌ வேறு பெயர்‌ இருப்பதும்‌ காய்ந்த இலைக்குக்‌ கூட வேறு பெயர்‌ இருப்பதும்‌ இவரால்‌ எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

 

காய்ந்த தாள்‌, தோகையைக்‌ குறிப்பது 'சண்டு' என்றும்‌, காய்ந்த இலையைக்‌ குறிப்பது 'சருகு' என்றும்‌ அழைக்கப்படுவதையும்‌ இவர்‌ நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார்‌.

படம் ஒவ்வொரு தாவரத்தின் இலைக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன புளி வேம்பு போன்றவற்றிற்கு இலை நெல்புல் போன்ற தாவரத்தின் இலைக்கு தாள் சோளம் கரும்பு போன்ற தாவரத்தின் இலைக்கு தோகை தென்னை பனை போன்றவற்றின் இலை ஓலை பற்றிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

குலைப்பெயர்‌ வகை

காய்கள்‌, கனிகள்‌ ஆகியன மொத்தமாகத்‌ தொகுதியாகக்‌ காய்த்திருப்பதற்கும்‌ தாவரங்களுக்கு ஏற்ப வேறுவேறு பெயர்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

 

படம் குலைப்பெயர் வகைகளில் அவரை துவரை திராட்சைக் குலை வாழைத்தாறு கேழ்வரகு கதிர் இவற்றின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

பழத்தோலின்‌ பெயர்‌ வகை

பல்வேறு பழங்களின்‌ மேற்பகுதியைக்‌ குறிக்க வேறுவேறு சொற்கள்‌ உள்ளதை

அறிந்துகொள்ள முடிகிறது. மிக மெல்லிய பழத்தோல்‌ வகை, தொலி எனப்படுகிறது. பழத்தோலின்‌ மேற்பகுதி திண்ணமாக இருந்தால்‌ தோல்‌, வன்மையாக இருந்தால்‌ ஓடு எனப்படுகிறது. முழுச்சுரையின்‌ ஓடு, குடுக்கை என்றும்‌ தேங்காய்‌ நெற்றின்‌ மேற்பகுதி, மட்டை என்றும்‌ வழங்கப்படுகின்றன.

 

மணிப்பெயர்‌ வகை

தானியங்கள்‌ என்று பொதுவாக நாம்‌ அறிந்தவற்றிற்கும்‌ வேறுவேறு பெயர்கள்‌

உள்ளன. தாவரங்களில்‌ விளையும்‌ தானியங்களை மணி என்போம்‌. இந்த மணி என்பதற்குப்‌ பல்வேறு பெயர்கள்‌ உள்ளன.

தானியங்கள்

குறிக்கும்‌ சொல்‌

நெல்‌, புல்‌ (கம்பு முதலிய தானியங்கள்‌)

கூலம்‌

அவரை, உளுந்து

பயிறு

வேர்க்கடலை, கொண்டைக்கடலை

கடலை

கத்தரி, மிளகாய்‌

விதை

புளி, காஞ்சிரை (நச்சு மரம்‌)

காழ்‌

வேம்பு, ஆமணக்கு

முத்து

மா, பனை

கொட்டை

தென்னை

தேங்காய்

அவரை, துவரை

முதிரை

 

இளம்பயிர்களின்‌ பெயர்‌ வகை

தாவரங்களின்‌ இளம்பருவத்தையும்‌ பல்வேறு சொற்களின்‌ மூலமாக அறியலாம்‌. நெல்‌, கத்தரி முதலியவற்றின்‌ இளநிலை, 'நாற்று' எனவும்‌ மா, புளி, வாழை முதலியவற்றின்‌ இளநிலை 'கன்று' எனவும்‌ வழங்கப்படுகின்றன. 'பிள்ளை' என்பது தென்னையின்‌ இளநிலையைக்‌ குறிக்கின்றது. பனையின்‌ இளநிலையானது 'மடலி' அல்லது 'வடலி' என வழங்கப்படுகிறது.

 

பல சொல்‌ வகைகள்‌

வித்துவகை, வேர்வகை, பூ வகை, காய்‌ வகை, கனி வகை உள்ளிட்ட இருபதுக்கும்‌ மேற்பட்ட தாவரங்கள்‌ சார்ந்த பல்வேறு பகுதிகளைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்‌ தமிழ்ச்‌ சொல்வளத்தின்‌ சிறப்பைப்‌ புலப்படுத்துவதைப்‌ பாவாணர்‌ எடுத்துக்காட்டுகிறார்‌.

 

சொல்வளம்‌ நிறைந்த மொழியானது, அது பயன்படுத்தப்படும்‌ நாட்டின்‌ வளத்தையும்‌ நாகரிகத்தையும்‌ உணர்த்துவதுடன்‌, பொருளைக்‌ கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்யும்‌ மக்களின்‌ மதிநுட்பத்தையும்‌ உணர்த்துகிறது. இதைப்‌ பகுத்தும்‌ தொகுத்தும்‌ வகைப்படுத்தியுள்ள பாவாணரின்‌ தமிழ்ச்சொல்வளம்‌ பற்றிய கருத்துகளை உணர்ந்து மொழியைப்‌ பயன்படுத்துவோம்‌.

நூல்‌ வெளி

படம் மொழி ஞாயிறு என்று அழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் நிழல் படம் இடம் பெற்றுள்ளது .

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்‌ தேவநேயப்‌ பாவாணரின்‌ "சொல்லாய்வுக்‌ கட்டுரைகள்‌" நூலில்‌ உள்ள தமிழ்ச்சொல்‌ வளம்‌ என்னும்‌ கட்டுரையின்‌ கருத்து பாடமாகத்‌ தரப்பட்டுள்ளது. இக்கட்டுரையில்‌ சில விளக்கக்‌ குறிப்புகள்‌ மாணவர்களின்‌ புரிதலுக்காகச்‌ சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கணக்‌ கட்டுரைகளையும்‌ மொழியாராய்ச்சிக்‌ கட்டுரைகளையும்‌ எழுதிய பாவாணர்‌, தமிழ்ச்‌ சொல்லாராய்ச்சியில்‌ உச்சம்‌ தொட்டவர்‌. செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ அகரமுதலித்‌ திட்ட இயக்குநராகப்‌ பணியாற்றியவர்‌; உலகத்‌

தமிழ்க்‌ கழகத்தை நிறுவித்‌ தலைவராக இருந்தவர்‌.

 

பெட்டி செய்தி

அலைகடல்‌ தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும்‌ பரவிய தமிழினத்தின்‌ ஒரு பதிவு எத்திசையும்‌ புகழ்‌ மணக்க...

கடல்கடந்து முதலில்‌ அச்சேறிய தமிழ்‌

போர்ச்சுகீசு நாட்டின்‌ தலைநகர்‌ லிசுபனில்‌, 1554இல்‌ கார்டிலா என்னும்‌ நூல்‌ முதன்‌ முதலாகத்‌ தமிழ்மொழியில்தான்‌ மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல்‌ ரோமன்‌ வரிவடிவில்‌ அச்சிடப்பட்டுள்ளது. ரோமன்‌ எழுத்துருவில்‌ வெளிவந்த இதன்‌ முழுப்பெயர்‌ Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில்‌ மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில்‌ முதலில்‌ அச்சேறியது தமிழ்தான்‌.

செய்தி ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support