தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மஞ்சள் பையில் 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க உள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது.
பொங்கல் பரிசு
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை ஆண்டுதோறும் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகிறது. அதையடுத்து தமிழகத்தில் வருகிற ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்க உள்ளது.
இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 20 வகையான பரிசு பொருட்கள் கொண்டது என்று கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த தொகுப்பில் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை போன்ற 20 வகையான பொருட்கள் உள்ளது. இந்த பரிசுப்பொருளுடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக 2,15,48,060 குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இதற்காக அரசு 1,088 கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை தமிழர்கள் மற்றும் அரசி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது ரூ.2.15 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளில் 20 பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்காமல் ‘மஞ்சள் பை’-யில் வழங்கப்படும். மாநில நுகர்வோர் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் இதனை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.