கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தடை: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து...!!

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தடை: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து...!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை மட்டும் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கும் ஒருமுறை நடவடிக்கையாக துணைத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என கேந்திரிய வித்யாலயா சங்கதன் விதிகளில் உள்ளதாக கூறி, 11-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments