திருக்குறள் - அதிகாரம் 49 - காலமறிதல் - விளக்கம்


481.பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

விளக்கம்:

  • தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.

482.பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை யாக்கும் கயிறு.

விளக்கம்:

  • காலத்தோடு பொருத்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மைவிட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

483.அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

விளக்கம்:

  • ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

(484) ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.

விளக்கம்:

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.

(485) காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

விளக்கம்:

  • உலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

(486) ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.


விளக்கம்:

  • ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர்மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக் கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

(487) பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம்:

  • அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

(488) செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.


விளக்கம்:

  • தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவு காலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.

(489) எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.


விளக்கம்:

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

(490 )கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

 குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம்:

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து, காலம் வாய்த்த போதில், கொக்கு மீனைக் குத்தினாற்போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...