தமிழ்நாடு காவல்துறையில் 615 SI காலியிடங்கள் அறிவிப்பு - முழு விவரம் இதோ!

தாலுகா, ஆயுதப் படை, சிறப்புக் காவல்படை ஆகியவற்றில் காலியாக உள்ள 615 காவல் சார்பு ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மொத்த காலிப்பணியிடங்கள்: 615

இதில், 20% இடங்கள்(எண்ணிக்கை- 123) பணியில் இருக்கும் காவலர்களுக்கும், 10% இடங்கள்( எண்ணிக்கை - 49) காவல்துறை வாரிசுகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், 10% இடங்கள் (எண்ணிக்கை - 49) விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பணியிடங்கள் பொது ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவலர்கள், தலைமைக் காவலர்கள் 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதேபோன்று, 10% வாரிசு இடஒதுக்கீட்டின் கீழ் பணியிலுள்ள, ஓய்வு பெற்ற மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டிற்கான பொது ஒதுக்கீட்டின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் தேசிய, மாநிலம், தமிழக பல்கலைக்கழகங்கள் சார்பாக பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2023 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது. அதிகபட்சம் பொதுப் போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

 விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 01.06.2023 முதல் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும். இத்தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஆகும்.

மதிப்பெண்கள் ஒதுக்கீடு: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றால் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி தகுதித் தேர்வு:

தமிழ் மொழி தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றால் மட்டுமே தேர்வர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.


20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.


முதன்மை எழுத்துத் தேர்வு:


பகுதி (அ)-பொது அறிவு மற்றும் பகுதி (ஆ)-தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் தேர்வு (Psychology Test), கருத்து பரிமாற்ற திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவை அடங்கும். எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 70.


ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண்கள் வழங்கப்படும், எழுத்துத் தேர்வுக்கான நேரம் 2 மணி 30 நிமிடங்கள் ஆகும். விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments